காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், இந்தியாவை அதிரடியாக பதிலடி எடுக்கத் தூண்டியுள்ளது. தற்போது மத்திய அரசு, பாகிஸ்தானை எவ்வாறு தண்டிக்க முடியும் என்பதை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுபோன்ற தாக்குதல்கள் புதியதல்ல. ஏற்கனவே 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் நான்கு பயங்கரவாதிகள் நம் ராணுவ தலைமையகம் மீது முறைப்படுத்திய தாக்குதலில், 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அந்த தாக்குதலுக்குப் பிறகு 11 நாட்கள் கழித்து, இந்திய ராணுவம் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து நடத்திய செயல்பாட்டில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பின்னர், 2019 பிப்ரவரி 14ஆம் தேதி, புல்வாமா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பயணித்த கான்வாய் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கான பதிலடியாக பிப்ரவரி 26 அன்று இந்தியா, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் அமைந்த ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம்களில் தாக்குதல் நடத்தி, பெரும் அழிவை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த முறை, தாக்குதலின் இலக்காக சுற்றுலா பயணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது மிகுந்த கவலையையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது. இது ராணுவ மட்டத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கியுள்ளது.
இதனால் இந்த முறை இந்தியாவின் பதிலடி இன்னும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்கள், முக்கிய தலைவர்கள் ஆகியோரை நேரடியாக குறிவைக்கும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
முதற்கட்டமாக பாகிஸ்தானின் பஹவல்பூர் பகுதியில் உள்ள லஷ்கர் தலைமையகத்தை அழிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற காரணத்தால் அந்த திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அதற்குப் பதிலாக, பயங்கரவாத அமைப்புகளின் ஏவுதளங்கள், பயிற்சி தளங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் இருந்து இயக்கப்படும் தலைமையகங்களை குறிவைத்து, இந்தியாவின் முப்படைகளும் ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.