
புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது கண்டனத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில், நாட்டின் பல மாநிலங்களைச் சேர்ந்த 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தங்கள் வருத்தத்தையும் கண்டனத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பஹல்காமில் அப்பாவி மக்கள்மீது நடந்த தாக்குதல் மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தைரியம் மற்றும் அமைதி கிடைக்க வேண்டும் என்றும் , இந்த கொடூர செயல் நீதிக்கு உட்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கே.எல். ராகுல், இந்த தாக்குதலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைத்து துக்கத்தில் இருப்பதாக தெரிவித்தார். சுப்மன் கில், நாட்டில் இத்தகைய வன்முறைக்கு இடமில்லை எனக் கூறி, தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரார்த்தனை தெரிவித்ததுடன், இந்த தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.
திரையுலகத்திலும் பலரும் இந்த சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா, அனுபம் கெர், கரீனா கபூர், விக்கி கவுசல், சித்தார்த் மல்ஹோத்ரா, சஞ்சய் தத், ரவீனா டன்டன், நானி, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன் மற்றும் அக்ஷய் குமார் உள்ளிட்டோர் இந்த தாக்குதல் மனிதநேயத்திற்கு எதிரானது எனக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர்.