பாகிஸ்தான் இந்தியாவின் ஏவுகணை மற்றும் விமான தளங்களை சேதப்படுத்தியதாக வெளியிடும் தகவல்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில், இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசினர். கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கமாண்டர் ரகு நாயர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.
சோபியா குரேஷி தெரிவித்ததாவது, எஸ்-400 பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிரமோஸ் ஏவுகணைகள் சேதமடைந்தன என பாகிஸ்தான் கூறுவது தவறானது. சிர்சா, ஜம்மு, பதன்கோட் உள்ளிட்ட விமான தளங்கள் சேதமடைந்தன என்ற தகவலும் உண்மையல்ல. சண்டிகர், வியாஸ் நகரங்களில் உள்ள வெடிமருந்து கிடங்குகள் மற்றும் மசூதிகள் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல்களும் பொய்யாகும். இந்தியா மதசார்பற்ற நாடு என்றும், மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கமாண்டர் ரகு நாயர் கூறுகையில், கடல், வான், நிலத்தில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் புரிதல் ஏற்பட்டதாகவும், இந்திய முப்படைகள் எப்போதும் முழுத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எந்தளவிலும் தளர்வில்லை என்றும் கூறினார்.விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறியதாவது, இந்தியா தாக்கிய இடங்கள் அனைத்தும் பயங்கரவாத முகாம்கள் மற்றும் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட தளங்களே.
மத வழிபாட்டு தளங்களை குறிவைத்ததில்லை. பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புகள் மிக கடுமையானவை. ஸ்கார்து, ஜகோபாபாத், போலாரி உள்ளிட்ட விமான தளங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன.அத்துடன், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள ராணுவ கட்டமைப்புகள், கட்டளை மையங்கள் மற்றும் ஆயுதங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பாக் வான் பாதுகாப்பு அமைப்புகளும் சேதமடைந்துள்ளன என்றும் கூறினார். எதிர்காலத்தில் ஏற்படும் எந்த ஒரு மோதலுக்கும் இந்தியா தயாராகவே இருப்பதாக இந்தியா வலியுறுத்தி வருகிறது.