புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக, பூஷன் ராமகிருஷ்ண கவாயை நியமிக்க, தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்துள்ளார்.
சஞ்சீவ் கன்னா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார், ஆனால் அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 13ம் தேதி முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய சட்டத்துறை அமைச்சகம் புதிய தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு சஞ்சீவ் கன்னாவிடம் ஆலோசனை கேட்டிருந்தது.

இதை ஏற்றுக்கொண்டு, மூத்த நீதிபதி பி.ஆர். கவாயை புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கின்றனர். ஜனாதிபதியின் ஒப்புதலுடன், இது இறுதி செய்யப்படும். பி.ஆர். கவாய் அடுத்த மாதம் 14ம் தேதி முதல், வரும் நவம்பர் மாதம் வரை, ஆறு மாதம் பொறுப்பில் இருப்பார்.
மஹாராஷ்டிராவின் அம்ராவதியைச் சேர்ந்த 65 வயதான பி.ஆர். கவாய் 1985ஆம் ஆண்டு வழக்கறிஞராக தொழிலில் இறங்கினார். மும்பை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற இவர், 1992 ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2003ஆம் ஆண்டில், மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகவும், 2005ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றினார்.
2019ஆம் ஆண்டு, அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உச்ச நீதிமன்றம் வழங்கிய பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளில் பி.ஆர். கவாயும் ஒரு முக்கிய பங்காற்றியவர். குறிப்பாக, பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு மற்றும் தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு வழங்கிய அமர்வில் அவர் இருந்தார்.
பி.ஆர். கவாய், முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு பிறகு, தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது நபர்.