ஸ்ரீநகர்: பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையை நடத்தினார்.

இதே நேரத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு, முதல்வர் உமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில்தான், மாநில அரசு இழப்பீடு தொகையை அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் லேசான காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.