சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி அளவிலான ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக, கே.என்.நேரு உள்பட 13 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 4-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கே.என்.நேருவின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 30 இடங்களில் கடந்த 5-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் 26 பக்கங்களில் பதிவு செய்துள்ள வழக்கு விவரத்தில், கே.என்.நேரு முதல் குற்றம் சாட்டப்பட்டவராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத், டி.வி.எச். கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த டி.ரமேஷ் மற்றும் டி.பிரபு உள்ளிட்டோரும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், கோவை நகரமைப்பு முன்னாள் அலுவலர் ஆர்.சசிப்ரியா, திருப்பூர் மண்டல முன்னாள் பொறியாளர்கள் ஜி.பாலச்சந்திரன் மற்றும் ஜி.முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம் மற்றும் ஜே.ஜே.எபினேசர் உள்ளிட்டோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நீர் வழங்கல் துறைகளைச் சேர்ந்த அடையாளம் தெரியாத அதிகாரிகள், தனியார் நபர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவனங்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
‘கட்சி நிதி’ என்ற பெயரில் டெண்டர் மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவி பிரசாத்தின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் வாட்ஸ்அப் உரையாடல்கள், குறுந்தகவல் திரைப்பிடிப்புகள் மற்றும் டெண்டர் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் விசாரணையில் முக்கிய ஆதாரங்களாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கே.என்.நேரு உள்பட 13 பேருக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
