சென்னை: 6 நாட்களில் சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து 6 நாட்களில் அரசுப் பேருந்துகள் மூலம் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சிரமமின்றிச் செல்வதற்காக கடந்த 9 ஆம் தேதி முதல் அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகக் கூறினார்.
இதேபோல பொங்கல் பண்டிகையை ஒட்டி, நேற்று மாலை வரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான பயணிகள், சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைத்திருநாள் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதற்காக ஜனவரி 9ஆம் தேதி முதல் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வரும் சூழலில், தனியார் ஆம்னி பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 6 நாட்களில் சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.