சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர். இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான முழு பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க அரசு அமைந்தது.
இதையடுத்து கடந்த 10-ஆம் தேதி விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். தொடர்ந்து 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற கூட்டத் தொடரில் த.வெ.க அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தி.மு.க வெளிநடப்பு செய்தது.
இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்களை 6 பகுதிகளாக பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முதலில் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அடுத்ததாக எதிர்ப்பு தெரிவிப்போர், நடுநிலை வகிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதன் அடிப்படையில் நம்பிக்கை தீர்மானத்துக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்த தீர்மானத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய மதச்சார்பற்ற கட்சிகள் த.வெ.க-வுக்கு ஆதரவு வழங்கியது.
அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி ஆதரவு தெரிவித்தது. வேலுமணி தரப்பில் ஹரி, எஸ்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், இசக்கி சுப்பையா, இரா.காமராஜ், சத்தியபாமா, லீமா ரோஸ், மரகதம் குமரவேல்,சுகுமார், சேகர், திலீபன் ஜெய்சங்கர், நட்ராஜ், நத்தம் விஸ்வநாதன், க.மோகன், ரவி மனோகரன், ராகேஷ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஜெயக்குமார், அருள்மொழித் தேவன், சி.வி.சண்முகம், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பண்ணன், இ.சி.கோவிந்தராஜன், சு.பழனிசாமி, ராமச்சந்திரன், உஷாராணி, ஜெயசுதா, சம்பத் குமார், தளவாய் சுந்தரம், நல்லதம்பி, ராஜசேகர், ராஜேந்திரன், கோ.வெங்கடாசலம், வெற்றிவேல், வேலழகன், ஜெயசங்கரன் உள்ளிட்டோர் தீர்மானத்தை எதிர்த்தனர். பா.ம.க, பா.ஜ.ட்க இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தது. இதன் அடிப்படையில் விஜய் தலைமையிலான த.வெ.க அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.
5 பேர் நடுநிலை வகித்தனர். இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.