சென்னை: பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது என்று இயக்குனர் ரஞ்சித் பாராட்டியுள்ளார்.
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. இதில் தவெக எம்.எல்.ஏக்கள் 21 பேர், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேர் என மொத்தம் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் இரகசியக் காப்புப் பிரமாணங்களைச் செய்து வைத்தார். இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் முதன் முறையாக முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைகிறது. அதே போல் கீர்த்தனா, கமலி, ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி என 4 பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். அதே போல், முதல்வர் விஜய் தலைமையின் கீழ் 7 பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.
நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கும் நீலம் பண்பாட்டு மையம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளர்.