சென்னை: 2026-ல் இ.பி.எஸ்.-க்கு தென்மாவட்ட மக்கள் மிக மோசமான தோல்வியை பரிசாக அளிப்பர் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2026 தேர்தலில் தென்மாவட்ட மக்கள் மிக மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமிக்கு பரிசாக அளிப்பர். பசும்பொன்னுக்கு வந்த செங்கோட்டையனை நீக்கிய இ.பி.எஸ். முடிவை தென்மாவட்ட மக்கள் அவமானமாக கருதுவார்கள்.
ஹிட்லரை போல செயல்பட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சியின் அடிப்படை விதியை மாற்றி விட்டார். இரட்டை இலை பலவீனப்பட்டாலும் பரவாயில்லை என கட்சி பதவியை பிடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தி.மு.க.வின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நான் துரோகியா? கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு காரணமான இ.பி.எஸ்.தான் தி.மு.க.வின் பி டீம். தகுதியே இல்லாத எடப்பாடி பழனிசாமி வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.