சிவகங்கை: தேவகோட்டை வட்டம் பிரண்டவயல் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழமையான கல்வெட்டு, சுமார் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரதோஷ வழிபாட்டுக்காக நிலம் தானமாக வழங்கப்பட்ட தகவலை இந்தக் கல்வெட்டு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரண்டவயல் கிராமத்தைச் சேர்ந்த முத்து மற்றும் ஆறாவயல் பெரியய்யா ஆகியோர் அளித்த தகவலின் பேரில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா கள ஆய்வு மேற்கொண்டார்.
ஐந்து வரிகளில் வரலாற்றுச் செய்தி
மூன்று அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட கல்வெட்டில் மொத்தம் ஐந்து வரிகள் காணப்படுகின்றன.
“திருனாகீசர், க்கு முத்து குமா, ரு தேவர் பிற, தோச கட்டளைக்கு, நம்பு குளி” என எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
எழுத்தமைதியின் அடிப்படையில் இது 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
முத்துகுமார் தேவர் என்பவர் திருநாகீசர் கோயிலில் பிரதோஷ வழிபாட்டுக்கான கட்டளைக்காக ‘நம்புகுளி’ எனப்படும் நிலப்பகுதியை தானமாக வழங்கிய செய்தியை கல்வெட்டு குறிப்பிடுவதாக அவர் விளக்கியுள்ளார்.
கல்வெட்டில் சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலத்தை குறிக்கும் திரிசூலச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இன்றும் தொடரும் நிலப்பெயர்
நிலத்தை தானமாக வழங்கிய முத்துகுமார் தேவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த நிலக்கிழாராக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், பிரண்டவயல் பகுதியில் ‘நம்புகுளி’ என்ற பெயரில் ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதி இன்றும் கோயில் நிலமாக அழைக்கப்படுவது இந்த கல்வெட்டின் தகவலுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
பிரண்டவயலுக்கு அருகில் உள்ள கோட்டவயலில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குட்பட்ட நாகநாதர் கோயில் அமைந்துள்ளதால், கல்வெட்டில் குறிப்பிடப்படும் திருநாகீசர் இந்தக் கோயிலுடன் தொடர்புடையவராக இருக்கலாம் எனவும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
பிரதோஷக் கட்டளையின் பழமை
கல்வெட்டில் ‘குழி’ என்பது ‘குளி’ என்றும், ‘பிரதோஷம்’ என்பது ‘பிறதோசம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதோஷக் கட்டளை என்பது தொன்று தொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதை தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட சோழர் கால சிவாலயக் கல்வெட்டுகளும் உறுதிப்படுத்துகின்றன. பிரதோஷ நாளில் இறைவனுக்கு உணவு படைப்பதற்காக காசு, பொன் மற்றும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட தகவல்கள் பல கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
