திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் விட்டல் பாண்டுரங்கன் பஜனாஸ்ரமத்தில், இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, ஏராளமான தம்பதியினர் பங்கேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்களுக்கு கோ பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
மாட்டுப் பொங்கலையொட்டி உலக மக்கள் நன்மைக்காக இன்று தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் விட்டல் பாண்டுரங்கன் பஜனாஸ்ரமத்தில், உள்ள கோசாலையில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்களுக்கு ஏராளமான தம்பதியினர் ஒரே நேரத்தில் பசுக்களுக்கு மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து வேத பண்டிதர் மந்திரங்கள் கூற அதனை திரும்பக் கூறி, உதிரி மலர்களாலும், மஞ்சள் தடவிய அட்சதைகளாலும் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்தும் தீபங்கள் காட்டியும் வழிபட்டு பசுக்களுக்கு வாழைப்பழங்களையும், செங்கரும்புகளையும் உணவாக அளித்து மகிழ்ந்தனர்.
பசுக்களை வழிபடுவதன் மூலம் நமது வாழ்வில் சகல விதமான சௌபாக்கியங்களும் கிட்டும் என்பதும், மேலும் பசுக்களை வழிபடுவதன் மூலம் அனைத்து விதமான தெய்வங்களையும் தேவர்களையும் வழிபட்ட பலன்கள் கிட்டும், பூஜை செய்பவர்களுக்கு மட்டுமின்றி இதனை காண்பவர்களுக்கும் அந்த நன்மைகள் கிட்டும் என்பது ஐதீகமாக இருப்பதால் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கோ பூஜை செய்து வழிபட்டனர்