நாகப்பட்டினம்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் மிரட்டி, அவர்களின் வலைகளை சேதப்படுத்தி, ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் வாக்கி-டாக்கிகள் உட்பட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்குச் சொந்தமான படகில் சண்முகம், ஜெயராமன், சக்திமயில் மற்றும் மணிமாறன் ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகை மோதி, கடலில் அவர்கள் விரித்திருந்த வலையை ரோந்து படகில் மோதி சேதப்படுத்தினர்.
மீனவர்களை மிரட்டி, படகில் இருந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், ஒரு ஜிபிஎஸ் கருவி, ஒரு வாக்கி-டாக்கி மற்றும் டீசலை பறித்துச் சென்றனர். இதனால், மீனவர்கள் படகை இயக்க முடியாமல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டனர். அப்போது, மற்றொரு படகில் வந்த நாகை மீனவர்கள் கடலில் தத்தளித்த செருதூர் கிராம மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.