சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய மனு மீது மார்ச் 21-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் செந்தில் பாலாஜி மற்றும் 2000க்கும் மேற்பட்டோர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்காக விசாரிக்க சென்னை எம்.பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரிக்கப்பட்டது.
அப்போது, ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறியிருந்தார். அதனால், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இந்த மனுவை இழுத்தடிக்க நோக்கில் அவகாசம் கேட்கப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினார். அவர், பதவிகளுக்காக பணம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து விசாரிக்க குறித்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும், இத்தகைய விசாரணையின் முடிவை கணக்கிட முடியாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.