சென்னை: சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பார்த்தசாரதிப் பெருமாள் பிரம்மோற்சவமும், ஆனி மாதம் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ள நரசிம்மப் பெருமாள் பிரம்மோற்சவமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து புன்னை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஏப்., 14-ல், பரமபதநாதன் வடிவில் இறைவன் அருள்பாலித்தல், சிம்ம வாகன வீதி உலா, 15-ம் தேதி கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. 16-ம் தேதி சூரியபிரபை, சந்திரபிரபை நிகழ்ச்சிகளும், 17-ம் தேதி பல்லக்கு நாச்சியார் வடிவில் அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று, சூர்ணாபிஷேகம், ஆனந்த விமானம், யானை வாகன வீதிதி உலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் இன்று நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு திருத்தேரில் பெருமாள் எழுந்தருளுகிறார். காலை 7 மணிக்கு தேர் நடைபெறும். நாளை பல்லக்கு-வெண்ணெய்தாழி வடிவில் அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், குடி வாகன வீதி உலாவும் நடக்கிறது. 21-ம் தேதி தீர்த்தவாரியும், 22-ம் தேதி சப்தாவர்ணம் என்ற சிறிய திருத்தேர் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.