அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் அரசியல் ஸ்டண்ட்… அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரஃபேல் கடிகாரம் குறித்து அரசியல் ரீதியாக சர்ச்சைகள் வெடித்த நிலையில், இந்த கடிகாரத்தை வாங்கியதற்கான ரசீதை சித்திரை மாதம் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட்டார். மேலும், தனது வங்கி கணக்கு, சம்பள விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை, தான் அணிந்திருக்கும் ரஃபேல் வாட்ச் பெல் அண்ட் ரோஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றும், ரஃபேல் வாட்ச் லைனில் 147வது வாட்சை வாங்கியதாகவும் கூறினார். மேலும் கோவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் ரூ.3 லட்சம் கொடுத்து கடிகாரத்தை வாங்கியதாகவும் கூறினார்.
மாதம் 8 லட்சம் ரூபாய் செலவழித்து வரும் நிலையில், வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல் என அனைத்திற்கும் நண்பர்கள் உதவுவதாக அண்ணாமலை கூறினார். இதையடுத்து, ஏற்கனவே அறிவித்தபடி திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அப்போது பேசியவர், வரும் லோக்சபா தேர்தலுக்கு முன், தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என திட்டவட்டமாக கூறினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் அரசியல் ஸ்டண்ட் என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். பாஜகவினருக்கு தொடர்புடைய பல்வேறு மோசடி புகார்கள் மீதான, மக்களின் பார்வையை திசை திரும்பும் நோக்கில், அண்ணாமலை செயல்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார். அவர், வெளியிட்ட பட்டியல் ஒரு பொருட்டே இல்லை எனவும் உதாசீனப்படுத்தியுள்ளார்.