ஜாக்ரெப்: குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றி கத்திக்குத்தில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு சிறிது நேரத்தில் மோதலாக மாறியது. அப்போது ஒரு மாணவன் சக மாணவர் ஒருவரையும், பள்ளி ஊழியர் ஒருவரையும் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த மீட்புக்குழுவினர் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காயமடைந்த மாணவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவன் கைது
கத்திக்குத்தில் ஈடுபட்ட மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாக்ரெப் நகரில் பள்ளிகளில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2024 டிசம்பரிலும் இதேபோன்ற பள்ளி தாக்குதல் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது முன்னாள் மாணவர் ஒருவர் பள்ளிக்குள் புகுந்து கத்தியால் தாக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழந்ததுடன், ஆசிரியர் மற்றும் குழந்தைகள் காயமடைந்தனர்.
