காரகாஸ்: புதிய இடைக்கால அதிபராக பதவியேற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ். தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் புதிய இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றுக் கொண்டார். அதேநேரம் வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், எதிர்ப்பாளர்களை வேட்டையாட ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸ் ஆகியோரை கடந்த 3ம் தேதி அமெரிக்க ராணுவம் அதிரடியாகச் சுற்றி வளைத்து சிறைபிடித்தது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதத் தடை மீறல் வழக்கு விசாரணைக்காக அவர்கள் நியூயார்க் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, நிர்வாகத் தொடர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அந்நாட்டின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து காரகாஸில் உள்ள நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பதவியேற்றார். இவ்விழாவில் பங்கேற்ற மதுரோவின் மகன் நிக்கோலஸ் மதுரோ குவேரா, புதிய தலைவருக்கு தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார். பதவியேற்பு விழாவில் பேசிய டெல்சி, மதுரோ கைது செய்யப்பட்டதை ‘சட்டவிரோத ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஆள்கடத்தல்’ எனத் கடுமையாக விமர்சித்தார்.
இருப்பினும், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயார் என்றும், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு ஒத்துழைப்புக்கான திட்டங்களை வகுக்க அமெரிக்க அரசிற்கு அழைப்பு விடுத்தார். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள செய்தியில், ‘வெனிசுலாவின் அதிகார மாற்றத்தை தற்போது நாங்களே கையாாள்கிறோம்; எண்ணெய் வளம் மற்றும் கொள்கை சீர்திருத்தங்களில் அமெரிக்காவின் முன்னுரிமைகளை ஏற்காவிட்டால் டெல்சி ரோட்ரிக்ஸ் மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும்’ என எச்சரித்துள்ளார்.
விரைவில் காரகாஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் திறக்கப்படலாம் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெனிசுலாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவசரச் சட்டத்தைப் புதிய இடைக்கால அரசு அமல்படுத்தியுள்ளது. கடந்த 1999ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்தச் சட்டம் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. மதுரோ கைது செய்யப்படுவதற்கு முன்பே அவரால் கையெழுத்திடப்பட்ட இந்த உத்தரவை, இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இந்த அவசர நிலை அடுத்த 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் மற்றும் அதனை ஊக்குவித்தவர்களை உடனடியாகத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்யப் பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.