சிங்கப்பூர்: நவீன மயமாகிவிட்ட சிங்கப்பூரின் வீதிகளில், இன்றும் பழமை மாறாத ஒரு ஐஸ்கிரீம் வண்டி அவ்வப்போது தென்படும். இது மக்களின் மனதை கவர்ந்த ஐஸ்கிரீம் வண்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. மலரும் நினைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வண்டிக்கார தாத்தா அடிக்கும் அந்த ‘டிங் டாங்’ மணிச்சத்தம், நம்மை அந்தக்கால நினைவுகளுக்குக் கொண்டு செல்லும். அப்படி ஒருநாள் தனது பால்கனியில் நின்றிருந்த கூகுள் முன்னாள் நிர்வாக இயக்குநர் பர்மிந்தர் சிங், ஒரு தந்தையும் மகனும் அந்த வண்டியில் ஐஸ்கிரீம் வாங்குவதைப் பார்த்தார்.
உடனே ஓடிப்போய் தனக்கும் ஒரு ‘வேஃபர் ஐஸ்கிரீம்’ வாங்கினார். அப்போது அவரது உதவியாளர், “ஐயா, ஏற்கனவே பிரிட்ஜில் ஐஸ்கிரீம் டப்பா இருக்கிறதே?” என்று கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் தான் இப்போ வைரல்: “எனக்குத் தெரியும், ஆனால் இந்த ஐஸ்கிரீம் என் சிறுவயது ஞாபகங்களை சுவைப்பது போல இருக்கிறது!”
சமூக வலைத்தளங்களில் பர்மிந்தர் சிங் பகிர்ந்த இந்தப் புகைப்படம், பல ஆயிரம் பேரையும் தங்களது பால்ய காலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. “பிரிட்ஜில் இருக்கும் விலை உயர்ந்த ஐஸ்கிரீமை விட, இந்தத் தெருவோர ஐஸ்கிரீமிற்கு தான் சுவை அதிகம்” என நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.