டெல்லி: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் தனது இந்திய வம்சாவளி மனைவி உஷா மற்றும் 3 குழந்தைகளுடன் AF2 விமானத்தில் வந்தார். டெல்லி வந்தடைந்த ஜே.டி.வான்ஸுக்கு இந்தியா சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜே.டி.வான்ஸை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். மூன்று சேவைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜே.டி.வான்ஸ் பெற்றார். இந்தியா வந்துள்ள ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய உள்ளார். ஜே.டி.வான்ஸ் இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

இருதரப்பு வர்த்தகம், வரிகள், பிராந்திய பாதுகாப்பு போன்றவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார். இந்திய பொருட்கள் மீதான கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார் டிரம்ப்.
இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் வான்ஸின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.