‘மகாபாரதம்’ படத்தின் கதையை இந்தியாவில் படமாக்க பல்வேறு இயக்குனர்கள் முயற்சி செய்தனர். ஆனால், அவை எதுவும் திட்டமிட்டபடி நடக்கவில்லை. அமீர்கான் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘மகாபாரதம்’ படத்தின் கதையை படமாக்குவதே தனது வாழ்நாள் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது அமீர்கான் மற்றொரு பேட்டியில் இந்த ஆண்டே அதற்கான பணிகளை தொடங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
‘மகாபாரதம்’ குறித்து அமீர்கான் கூறும்போது, “இந்த வருடமே ‘மகாபாரதம்’ படத்தின் வேலைகளை தொடங்க வேண்டும் என்பதுதான் எனது ஒரே லட்சியம். படப்பிடிப்பை தொடங்க சிறிது நேரம் ஆகும். ஏனென்றால் படத்தை முதலில் எழுதி முடிக்க சில மாதங்கள் ஆகும். பெரிய கதை என்பதால் பல பாகங்களாக படமாக்க திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு பாகத்திற்கும் சரியான நடிகர் யார் என்பதை வைத்து நடிகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ ஸ்டைலில், ஒவ்வொரு பாகத்துக்கும் வித்தியாசமான இயக்குனர் இருந்தால்தான், சீக்கிரம் படமாக்க முடியும். இல்லையேல் ஒரு பகுதியை முடித்த பின்னரே அடுத்த பகுதியை ஆரம்பிக்க முடியும். இப்போதைக்கு படத்தை நானே தயாரிக்க திட்டமிட்டுள்ளேன்” என்றார்.