சென்னை: நீ பாடும்போது உடனிருந்த நாட்கள் என்று எஸ்.பி.பி.-யின் நினைவு நாளில் வைரமுத்துவின் பதிவு வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவு தினத்தையொட்டி திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாசமுள்ள பாட்டுக்காரா! நினைவு நாளில் அல்ல உன்னை நினைக்காத நாளில்லை. நீ பாடும்போது உடனிருந்த நாட்கள் வாழ்வின் நிம்மதி நிமிடங்கள். ‘பொன்மாலைப் பொழுது’ உன் குரலின் அழகியல் வசீகரம்
‘சங்கீத ஜாதிமுல்லை’ கண்ணீரின் திருவிழா, ‘காதல் ரோஜாவே’ , கவிதைக் கதறல், ‘வண்ணம்கொண்ட வெண்ணிலவே’ காதலின் அத்வைதம், ‘பனிவிழும் மலர்வனம்’ சிருங்காரச் சிற்பம், ‘காதலே என் காதலே’ தோல்வியின் கொண்டாட்டம். ஒவ்வொரு பாட்டிலும், உனக்குள்ளிருந்த நடிகனைக்
கரைத்துக் குழைத்துப் பூசியிருப்பாய், உன் வரவால் திரைப்பாடல் பூச்சூடிநின்றது. உன் மறைவால், வெள்ளாடை சூடி நிற்கிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.