தஞ்சாவூர்: தேசிய ஜனநாயக கூட்டணியில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை சந்தித்து லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஜேஎம்எஸ் மாநில செயலாளர் பி.கருணாகரன் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) முக்கிய சக்தியாக உள்ளது. அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி ராமதாஸ் பிரிவு), அமமுக (டிடிவி தினகரன்) உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணியாகச் செயல்படுகின்றன. இந்த கூட்டணி சார்பில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக கருப்பு முருகானந்தம் களம் இறங்கி உள்ளார்.

தஞ்சை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி கூறி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஜேஎம்எஸ் மாநில செயலாளர் பி.கருணாகரன் மற்றும் மாவட்ட தலைவர் நாஞ்சி.விஜய், செயலாளர் சுவாமி மேனன் ஆகியோர் வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஜேஎம்எஸ் மாநில செயலாளர் பி.கருணாகரன் கூறுகையில், மத்திய அரசு ஏராளமான நலத்திட்டங்களை தமிழகத்திற்கு செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், தமிழகத்தில் ஜன் தன் திட்டத்தில் 1.7 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தூய்மை பாரத திட்டத்தில் 59 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் இயக்க திட்டத்தில் 89 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் 41 லட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் என்ற விகிதத்தில் 79 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 4,100 கி.மீ.க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2014 முதல் 1,303 கி.மீ.க்கும் அதிகமான புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 2,242 கி.மீ. ரயில் வலையமைப்பு மின்மயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 94% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 54 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.
உதான் திட்டத்தின் கீழ், சேலம் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது, அதே நேரத்தில் நெய்வேலி மற்றும் வேலூரில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கூடுதலாக, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மாநிலங்களுக்கு மூலதன செலவினத்திற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் மூலம் மூலதனச் செலவில் மாநில அரசுகளின் முதலீட்டை ஆதரித்துள்ளது. இதில் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு 50 ஆண்டு வட்டி இல்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிதியுதவி, நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் இல்லாமலேயே வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது. இவ்வாறு சிறப்பாக தமிழகத்திற்கு நலத்திட்டங்களை செய்துள்ள மத்திய அரசின் என்டிஏ கூட்டணி தஞ்சை தொகுதி வேட்பாளர் கருப்பு முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது வெற்றிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.