கொடைக்கானல்: கொடைக்கானலில் 4 முக்கிய இடங்களுக்கு மே 31 வரை நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்து.
கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கிவிட்டதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கொடைக்கானல் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்று முதல் மே 31 ஆம் தேதி வரை வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 4 சுற்றுலா தலங்களுக்கு கட்டணம் கிடையாது என்று திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் கொடைக்கானலும் ஒன்றாகும். கொடைக்கானல் முழுவதும் பசுமையான மரங்கள், மலர்கள், மலைச்சரிவுகள் மற்றும் குளிர்ச்சியான காற்று நிரம்பிய சூழல் காணப்படுவதால், வருடம் முழுவதும் இதமான காலநிலை நிலவுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் எப்போதும் வருகை தருகின்றனர்.
இருப்பினும், குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள கோடைக்காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்படுகின்றனர். ஏனென்றால், இந்த மாதங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைக்கக் கூடிய காலம். மேலும் கொடைக்கானலை பொறுத்த வரை சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன.
குறிப்பாக கொடைக்கானல் ஏரி, குணா குகை, பைன் மரக் காடுகள், பில்லர் ஆக், மோயர் சதுக்கம் போன்ற பகுதிகள் சுற்றுலா பயணிகளின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கிறது.
கொடைக்கானலில் உள்ள அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் ஒரே இடத்தில் தான் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாயுடுபுரம், மூஞ்சிகள், ஏரிச்சாலை, செண்பகனூர் போன்ற பகுதிகளீல் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், மலைச்சாலைகளில் பல மணி நேரங்களாக வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இதையடுத்து, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல 5 இடங்களில் நுழைவு சீட்டு பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், 4 இடங்களுக்கு இன்று முதல் வருகின்ற மே 31 ஆம் தேதி வரை மொத்த 7 நாட்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது என்று திண்டுக்கல் மாவட்டச் ஆட்சியர் சரவணன் அறிவித்து இருக்கிறார்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, பில்லர் ராக், பைன் மரக் காடுகள் மற்றும் மோயர் சதுக்கம் ஆகிய 4 சுற்றுலாப் பகுதிகளுக்கு மட்டுமே அனுமதி இலவசம், அதாவது கட்டணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும்