சென்னை: இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து தவெக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை தற்போதைய 3.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் முன்வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட இந்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதாகவும், மேலும் இடஒதுக்கீட்டை உயர்த்துவது அவர்களுக்கான வாய்ப்புகளை குறைக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மத அடிப்படையிலான ஒதுக்கீடு தொடர்பாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டிய அவர், இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை உயர்த்துவது எந்த வகையில் நியாயம் என்பதையும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தவெக அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், சமூக நீதியை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.