சென்னை: இலங்கை கடற்படையால் 11 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அனுமதி பெற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு விசைப்படகில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பலத்த நீரோட்டத்தில் சிக்கிய படகு, நெடுந்தீவு கடல் பகுதியை நோக்கி கட்டுப்பாட்டை இழந்து சென்றுள்ளது.
இதையடுத்து, மீனவர்கள் படகை மீண்டும் இந்திய கடல் எல்லைக்குள் திருப்ப முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையை மீறியதாகக் குற்றம்சாட்டி 11 தமிழக மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைக்காக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணை முடிந்த பின்னர் அவர்கள் அந்நாட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும், ஏற்கனவே இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் விஜய், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இந்தியா-இலங்கை இடையேயான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை உடனடியாக மேற்கொண்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்தியா-இலங்கை கூட்டு செயல்பாட்டுக் குழு மூலம் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
