ராமநாதபுரம்: திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல ஆண்டுகளாகக் கண்டெடுத்து பாதுகாத்து வந்த பழமையான காசுகள், ஓலைச்சுவடி, எழுத்தாணி உள்ளிட்ட தொல்லியல் பொருட்கள், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்களின் ஆய்வுக்காக வழங்கப்பட்டுள்ளன.
திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் வே. இராஜகுரு, மாணவர்கள் சேகரித்த பொருட்களை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
2010 முதல் தொடரும் தொல்லியல் தேடல்
பள்ளியில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு பழமையான நாணயங்கள், பானை ஓடுகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை அடையாளம் காணுதல், கல்வெட்டுகளைப் படித்தல், படியெடுத்தல், கோயில் கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மாணவர்கள் தங்களது பகுதிகளில் வரலாற்றுத் தடயங்களைத் தேடி கண்டறிந்து வருகின்றனர்.
சுதர்சன் என்ற மாணவர் பால்கரையில் கண்டெடுத்த டச்சுக்காரர்களின் பணமான 2 துட்டு, பாதசெல்வம் கண்டெடுத்த இலங்கை சதம் காசு, தென்னாப்பிரிக்க பென்னி காசு, தாஜ்குமார் பஞ்சந்தாங்கியில் கண்டெடுத்த ஈழக்காசு, சமயமுத்து சேதுக்கரையில் கண்டெடுத்த அம்மன் சல்லிக்காசு, விசாலி வழங்கிய மலேயா சென்ட் காசு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மேலும் ஓலைச்சுவடி மற்றும் எழுத்தாணியும் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
200-க்கும் மேற்பட்ட பொருட்கள்
பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் பொறுப்பு சுதாகர் கூறுகையில், ஆசிரியர் இராஜகுரு தனது சொந்த முயற்சியில் கள ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்த 200-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்களை ஏற்கனவே துறைக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது வழங்கப்பட்டுள்ள காசுகள், ஓலைச்சுவடி மற்றும் எழுத்தாணி ஆகியவை தொல்லியல் மாணவர்களின் ஆய்வுக்கும் கல்விக்கும் பெரிதும் உதவும் என்றும் அவர் கூறினார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், ஆசிரியர் இராஜகுரு மற்றும் மாணவ, மாணவிகளை பாராட்டினார்.
