சென்னை: அடிசன் நோய்: சோர்வு முதல் சருமம் கருமையாதல் வரை எச்சரிக்கை அறிகுறிகள்அடிசன் நோய் அல்லது முதன்மை அட்ரினல் பற்றாக்குறை என்பது அட்ரினல் சுரப்பிகள் போதுமான அளவில் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாததால் ஏற்படும் அரிதான மருத்துவ நிலையாகும்.
சிறுநீரகங்களுக்கு மேல் அமைந்துள்ள அட்ரினல் சுரப்பிகள் கார்டிசோல் மற்றும் அல்டோஸ்டிரோன் உள்ளிட்ட முக்கிய ஹார்மோன்களை சுரக்கின்றன. இவை உடலின் வளர்சிதை மாற்றம், ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆரம்பத்தில் தீவிர சோர்வு, தசை பலவீனம், பசியின்மை, உடல் எடை குறைதல், மனநிலை மாற்றம், அதிக தாகம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். நோய் தீவிரமடையும் போது தலைச்சுற்றல், மயக்கம், தசைப்பிடிப்பு மற்றும் சருமம் அல்லது உதடுகள் கருமையாதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அட்ரினல் சுரப்பியைத் தாக்குவதுதான் பெரும்பாலான முதன்மை அடிசன் நோய் பாதிப்புகளுக்குக் காரணமாகும். காசநோய் போன்ற சில நோய்த்தொற்றுகளாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஹார்மோன் மாற்று மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். மருந்தை தவறவிடுவது அல்லது கடுமையான நோய் ஏற்படுவது ‘அட்ரினல் கிரைசிஸ்’ எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடும். கடுமையான குமட்டல், குழப்பம், காய்ச்சல், திடீர் பலவீனம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
