சென்னை: சட்டப்பேரவை விவாதங்களில் லாட்டரி தொழில் தொடர்பாக தனது பெயர் தொடர்ந்து இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையைச் சேர்ந்த மார்ட்டின் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் லாட்டரி தொழில் செய்து வருவதாகவும், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது குடும்பத்தினரின் அரசியல் தொடர்புகளும் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மார்ட்டினை மையமாக வைத்து திமுக – தவெக தரப்புகளுக்கு இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் தனது பெயர் மற்றும் லாட்டரி தொழில் குறித்து திமுக உறுப்பினர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என ஸ்டாலினிடம் மார்ட்டின் தரப்பில் நண்பர் ஒருவர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு, விவகாரம் தொடர்பான பேச்சுகள் அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா தொடர்பான அரசியல் நிலைப்பாட்டை பொறுத்தது என்ற வகையில் பதில் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேச மார்ட்டின் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
