சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் அரசியல் சூட்டை கிளப்பியது. வழக்கு தொடர்ந்தவர் யார் என்பது தொடர்பாக அதிமுக – திமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலால் அவையில் பரபரப்பு நிலவியது.
விவாதத்தின் போது திமுக தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக சி.வி.சண்முகம் கூறியதாக திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்தக் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். திமுக கொறடா எ.வ.வேலு, வன்னியர்களுக்கு சட்டப் பாதுகாப்புடன் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு என்றார்.
மறுபுறம், அதிமுக முன்னாள் முதல்வர் பழனிசாமி, தங்கள் ஆட்சிக் காலத்தில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், அதற்கான குழு அமைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
பாமக உறுப்பினர் கணேஷ்குமார், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் இடஒதுக்கீட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்கமளித்ததுடன், தேவையான தரவுகள் வழங்கப்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விவாதத்தின் முடிவில், தனது குற்றச்சாட்டு தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சி.வி.சண்முகம், கூறிய குற்றச்சாட்டை வாபஸ் பெற்றார்.
