பெங்களூரு: ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய பேரணியில் பங்கேற்றதாக கூறப்படும் இரு அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.
யாதகிரி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் குருராஜ் ஜோஷி மற்றும் அண்ணா சாஹேப் தேஷ்முக் ஆகிய இரு ஆசிரியர்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
அவர்கள் பேரணியில் கலந்து கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து யாதகிரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இருவரையும் பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.
கர்நாடக குடிமைப் பணிகள் நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அரசு ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது.
