தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராவுத்தான் பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய மீன் மார்க்கெட் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், அதனை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சியின் 12-வது வார்டுக்கு உட்பட்ட ராவுத்தான் பாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிய மீன் மார்க்கெட் கட்டும் பணி தொடங்கப்பட்டது. 2024-25-ஆம் ஆண்டு ரூ.958 லட்சம் (ரூ.9.58 கோடி) மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பணிக்கான ஒப்பந்த காலம் 12 மாதங்கள் என நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் புதிய மீன் மார்க்கெட் பயன்பாட்டுக்கு வராமல், பொதுமக்களும் வியாபாரிகளும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தஞ்சாவூர் வெள்ளைப் பிள்ளையார் கோவில் பகுதியில் மாநகராட்சி சார்பில் தற்காலிக மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இங்கு மீன் வாங்க வரும் பொதுமக்களிடம் வாகன நிறுத்தக் கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
மீன் மார்க்கெட்டின் வெளிப்புறப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்திச் செல்லும் பொதுமக்களிடமும் வாகனக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தஞ்சாவூர் கொடிமரத்து மூளை பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தற்காலிக மீன் மார்க்கெட் அமைந்துள்ள பகுதி வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் ஏற்கெனவே வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது.
வாகன நிறுத்தக் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி, மீன் வாங்க வரும் பலர் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மார்க்கெட்டுக்கு வெளியே சாலையோரங்களில் நிறுத்திச் செல்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அவ்வப்போது விபத்துகளும் நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய மீன் மார்க்கெட் கட்டுமானப் பணி தாமதமாவது ஒருபுறம்; தற்காலிக மார்க்கெட்டில் வாகன நிறுத்தக் கட்டணம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் மறுபுறம் என பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ராவுத்தான் பாளையத்தில் நடைபெற்று வரும் புதிய மீன் மார்க்கெட் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி, எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், கட்டடத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, தற்காலிக மீன் மார்க்கெட்டால் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
