சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அனைவரின் வாழ்க்கைப் பாதையிலும் அறிவொளி ஏற்றி, கனவுகளை நோக்கிப் பயணிக்க வழிகாட்டும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் கல்வியின் முக்கியத்துவத்தையும் போற்றும் நாளாக இது திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பாடங்களை மட்டுமல்லாமல் வாழ்க்கையையும் கற்றுத்தந்து, அறிவை விதைத்து, நம்பிக்கையை வளர்த்து, தலைமுறைகளை உருவாக்கும் ஆசிரியர்களின் பணி அளப்பரியது என்றும் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
