சென்னை: நெதர்லாந்தின் விஜிக் ஆன் ஜீயில் நடைபெற்ற 87-வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் சென்னையைச் சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். 13 சுற்றுகளின் முடிவில், பிரக்ஞானந்தா மற்றும் உலக சாம்பியனும், இந்திய கிராண்ட்மாஸ்டருமான டி.குகேஷும் தலா 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
டைபிரேக்கரை 2-1 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். சாம்பியன் பிரக்ஞானந்தா துபாய் வழியாக நேற்று காலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பிரக்ஞானந்தா கூறியதாவது:- 85 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ளேன்.
இந்த தொடரில் அதிக எண்ணிக்கையிலான உலக சாம்பியன்கள் விளையாடிய போது சாம்பியன் பட்டம் வென்றது பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் எனது ஆட்டம் சிறப்பாக இல்லை. இப்போது 2025-ல், முதல் தொடரையே வென்றுள்ளேன். இந்த தொடருக்காக நிறைய பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த ஆண்டு முக்கியமான செஸ் தொடர் நடைபெற உள்ளது. எனவே, தற்போதைய வெற்றியை முக்கியமானதாக கருதுகிறேன்.
இந்தத் தொடரில் நான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் மகிழ்ச்சியாக விளையாடினேன். கடைசி சுற்று மட்டும் பரபரப்பாக இருந்தது. சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வது யார் என்பதை தீர்மானிக்க நடந்த டை பிரேக்கரில், நானும் குகேஷும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் யார் ஜெயித்தாலும் நமக்குத்தான் பட்டம் கிடைத்திருக்கும். இது மிகவும் பெருமைக்குரிய விஷயம். இவ்வாறு பிரக்ஞானந்தா கூறினார். பிரக்ஞானந்தா அடுத்ததாக பிப்ரவரி 25 முதல் மார்ச் 7 வரை நடைபெறும் ப்ராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் விளையாடுகிறார்.