திருப்பதி ஆஷா அரங்கில் ‘டெம்பிள் கனெக்ட்’ அமைப்பு சார்பில் 3 நாள் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் திங்கள்கிழமை மாலை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். இந்த மாநாட்டில் இந்து, சீக்கியர், பௌத்தம் மற்றும் ஜைன மதங்களைச் சேர்ந்த 58 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
1581 கோவில்கள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் கோயில் கலாசாரம், பாரம்பரியம், பராமரிப்பு, நிர்வாகம், பக்தர்கள் பங்கேற்பு, அரசுகளின் பங்கேற்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 2-வது நாளான நேற்று தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:- கடந்த ஆண்டு காசியில் இந்த மாநாடு நடந்தது. தற்போது திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இங்கு வந்தவர்கள் கோவில்களின் வளர்ச்சியையும், சனாதன தர்மத்தையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கடந்த 250 ஆண்டுகளில் நாம் எதை இழந்தோமோ, அதை பெரியோர்களின் ஆலோசனையுடன் மீட்டெடுக்க வேண்டும்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் சந்தை மதிப்பு மட்டும் சுமார் ரூ. 2.5 லட்சம் கோடி. இது உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் மதிப்பை விடவும், நம் நாட்டின் மதிப்பை விடவும் அதிகம். ஆனால், பல இந்துக் கோயில்களின் வருமானம் அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் வீணடிக்கப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கோவில்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும். அவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்ததும் இந்து சமய அறநிலையத்துறை ஒழிக்கப்படும்.
ஏழுமலையான் அருளுடனும், மக்களின் நம்பிக்கையுடனும் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும்போது, தமிழகத்தில் உள்ள 44,121 கோயில்களும் இந்து சமய அறநிலையத் துறையின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும். கோயில்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இப்பகுதியில் கல்வி நிறுவனங்கள், உள்கட்டமைப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம். சோழர் காலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இவை நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ஒன்றிணைத்து, சனாதன தர்மத்தின் வாழ்வாதாரத்திற்கு தேவையான ஆன்மீக சகோதரத்துவத்தை புதுப்பிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.