தஞ்சாவூர்: ஆட்டோவில் வந்து ஆடுகள் திருடிய இரண்டு பேரை பொதுமக்கள் வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தஞ்சாவூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் பரமசிவம் ( 47) கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகளை திருடிக் கொண்டு அதனை ஆட்டோவில் ஏற்றினர்.
அப்போது சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டனர். உடனே மர்ம நபர்கள் ஆட்டோவில் ஏறி தப்ப முயன்றனர் . அதற்குள் பொதுமக்கள் சுற்றி வளைத்து 2 பேரையும் பிடித்து மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை ரெட்டிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (46), சிங்கப்பெருமாள் குளத்தை சேர்ந்த சந்துரு (36) என்பதும், ஆடுகளை கடத்தி திருட முயன்றதும் தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியம், சந்துரு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.