கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:- சந்திரயான்-5 திட்டத்துக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளோம். இந்த திட்டத்தில் ஜப்பானுடன் இணைந்து செயல்பட உள்ளோம். இது சந்திரயான்-5 திட்டத்தின் அறிவியல் திறன்களை மேலும் மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஆகஸ்ட் 23, 2023 அன்று சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் எந்த சேதமும் இல்லாமல் வெற்றிகரமாக தரையிறக்கியது.
இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. சந்திரயான்-5 திட்டம் நிலவை முழுமையாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, சந்திரயான்-3-ல் பயன்படுத்தப்பட்ட சிறிய ரோவர் இதில் சேர்க்கப்படாது. மாறாக நிலவின் மேற்பரப்பை விரிவாக ஆய்வு செய்ய 250 கிலோ எடையுள்ள பெரிய ரோவரை அனுப்ப உள்ளோம். இவ்வாறு நாராயணன் கூறினார்.

2008-ல் சந்திரயான்-1, 2019-ல் சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ, 2027-க்குள் சந்திரயான்-4ஐ முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் சந்திரயான்-5 மற்றும் 6 திட்டங்களை முடிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது விண்வெளித் துறையில் 44 பில்லியன் டாலர்கள் என்ற மைல்கல்லை எட்ட உதவும். சந்திரயான் திட்டங்களைத் தொடர்ந்து இஸ்ரோவும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமாகும்.