சென்னை: பாலியல் கொடுமைகள் குறித்து கசப்பான அனுபவம் குறித்து நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். கடந்த ஆண்டு தொழில் அதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
வரலட்சுமி, தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நடன நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்று இருக்கிறார். நடனம் ஆடுவதில் வல்லவரான வரலட்சுமி, போட்டியாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
இதற்கிடையில் பெண் போட்டியாளர் சிறிய வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து வேதனைகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அந்த சம்பவத்தை கேட்டு வரலட்சுமியும் கண்கலங்கி போனார்.
அவர் பேசும்போது, ”நானும் இந்த கொடுமைகளை அனுபவித்துள்ளேன். என் அப்பா, அம்மா இருவருமே தொழிலில் பிசியாக இருந்தார்கள். இதனால் அக்கம் பக்கத்து வீடுகளில் என்னை பார்த்துக்கொள்ளுமாறு கூறி அங்கே என்னை விட்டு சென்றுவிடுவார்கள்.
6 பேர் வரை என்னை சிறுவயதில் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். எனவே அந்த பாதிப்பின் தன்மையை என்னால் உணரமுடியும். எனக்கு குழந்தைகள் இல்லை. ஆனாலும் எல்லா பெற்றோருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் பிள்ளைகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ பற்றி கண்டிப்பாக சொல்லிக்கொடுங்கள்”, என்று குறிப்பிட்டார்.