சென்னை: : ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் தயாரிப்பாளருக்கே சொந்தம் என்று கூறி இளையராஜாவின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.
‘மூடுபனி’ படத்தில் இடம் பெற்ற ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலின் முழுமையான பதிப்புரிமை தனக்கே சொந்தம் என இசையமைப்பாளர் இளையராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஏற்கனவே இந்தப் பாடலின் உரிமத்தைக் கைவசம் வைத்துள்ள சரிகம நிறுவனம், தங்களது அனுமதி இல்லாமல் இளையராஜா இந்த பாடலை பயன்படுத்த கூடாது என டெல்லி உயர்நீதி மன்றத்தில் முன்னதாக மனுத் தாக்கல் செய்திருந்தது.
இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள உயர் நீதிமன்றம், காப்புரிமை சட்டங்களின்படி ஒரு பாடலின் இசை மற்றும் மெட்டுகள் ஆகியவை மட்டும் தான் இசையமைப்பாளருக்குச் சொந்தமானது. அதில் வரும் வரிகளோ அல்லது இறுதி ஒலிப்பதிவோ இசையமைப்பாளருக்குச் சொந்தம் கிடையாது.
அது மட்டும் இல்லாமல் காப்புரிமை சட்டப்பிரிவு 2(எப்) ன் கீழ் திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களின் ஒட்டுமொத்த உரிமையும் படத்தின் தயாரிப்பாளரையே சாரும். எனவே, இளையராஜா இந்த பாடலுக்கு உரிமை கொண்டாட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், சினிமா பாடல் என்பது இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பலரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும் ஒரு படைப்பாகும். எனவே, இதனைத் தனி ஒரு நபர் முழு உரிமையும் கொண்டாட சட்டம் அனுமதிக்காது என நீதி மன்றம் குறிப்பிட்டுள்ளது.