தோனிக்கு கிடைத்த அளவிற்கு ரோகித் சர்மாவிற்கு புகழ் கிடைக்கவில்லை… சுனில் கவாஸ்கர் கருத்து
இந்தியா: சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கிடைப்பதை போல மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பாராட்டுகள் கிடைப்பதில்லை என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோவை வீழ்த்தியது. இப்போட்டியில் இளம் வீரர் ஆகாஷ் மதிவால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.
இப்போட்டி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ‘மதிவால் ஓவர் த விக்கெட்டிலிருந்து வந்து பதோனி விக்கெட்டை வீழ்த்தினார். ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வந்து நிக்கோலஸ் பூரணின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதை அனைத்து பவுலர்களும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு எப்படி பந்து வீசினால் விக்கெட்டுகள் கிடைக்கிறதோ, அப்படியே தான் பந்து வீச நினைப்பார்கள். ஆனால் அரௌண்ட் த விக்கெட்டில் சென்று பந்து வீசி, பூரணின் விக்கெட்டை வீழ்த்தினார்.
துஷார் தேஷ்பாண்டே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே மற்றும் பலரின் திறமைகளை வெளிக்கொண்டு வந்ததற்காக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் தோனியைக் கொண்டாடுகிறார்கள். தோனியின் கீழ் மதிவால் இதையே செய்திருந்தால், அவரது கேப்டன்ஷிப்பை உலகமே கொண்டாடியிருக்கும்.
மேலும் பேட்டிங் செய்யும் போது வதேராவை ரோகித் சர்மா இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்தினார். முதலில் பேட்டிங் செய்யும் போது, ஒரு பேட்ஸ்மேனை அந்த அணி இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்தாது. ஆனால் ரோகித் சர்மா பயன்படுத்தினார்.
இதையெல்லாம் தோனி செய்திருந்தால் அவர்தான் வெற்றி பெற்றார், அவருடைய வியூகத்தால் தான் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது என்று பலரும் கூறியிருப்பார்கள். சில நேரங்களில் அது நடக்கும். ஆனால் தோனிக்கு கிடைத்த புகழ் ரோஹித் சர்மாவுக்கு கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். சுனில் கவாஸ்கரின் இந்த கருத்துக்கு பலரது ஆதரவும், விமர்சனமும் கிடைத்து வருகிறது.