அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் திருத்த மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் மத சிறுபான்மையினருக்கு ரூ.2 கோடி வரையிலான ஒப்பந்தப் பணிகளில் 4% இடஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு பாஜக ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், கர்நாடக சட்ட அமைச்சர் எச்.கே. பாட்டீல் நேற்று சட்டசபையில் ‘கர்நாடகா பொது கொள்முதல் (திருத்த) மசோதா 2025’ என்ற பெயரில் இந்த திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், ”கர்நாடகாவில் சிறுபான்மையினர் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்ற துறைகளில் பின்தங்கி உள்ளனர்.

அந்த பிரிவினருக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளதால், 1999-ல் கொண்டு வரப்பட்ட கர்நாடகா பொது கொள்முதல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். எனவே, அரசு ஒப்பந்தப் பணிகளில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் திருத்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம், அந்த பிரிவுக்கு ரூ. 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இதன் மூலம், அந்த பிரிவினரிடையே வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையை போக்க முடியும்,” என்றார். இந்த சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பா.ஜ.க., கட்சி எம்.பி.யும், அக்கட்சி இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா கூறுகையில், ”கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, முஸ்லிம் ஓட்டு வங்கியை குறிவைத்து, இந்த இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. தேர்தல் அரசியலுக்காக, காங்., நடத்தும் நாடகத்தை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஏற்க முடியாது என, பாபாசாகேப் அம்பேத்கர் கூறியுள்ளார். இதை எதிர்த்து சட்டசபை, பார்லிமென்ட் உள்ளேயும் வெளியேயும் பா.ஜ.க., போராடும்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவோம். இதை கண்டித்து கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துவோம். கர்நாடக அரசின் சட்டத்திருத்த மசோதாவை சட்டசபையில் தோற்கடிப்போம்,” என்றார். இதற்கு, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறுகையில், “கர்நாடக அரசின் முடிவை மத அடிப்படையில் அணுகக்கூடாது. சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படும் உரிமையாக அணுக வேண்டும். இந்த திருத்தத்தால் முஸ்லிம்கள் மட்டுமின்றி, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயின் உள்ளிட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பயனடைவார்கள்” என்றார்.