அமர்நாத்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த குகையில் இயற்கையாக உருவான பனி லிங்கம் சிவபெருமானின் வடிவமாக வழிபடப்படுகிறது. இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை குறித்த முக்கிய தகவல் மற்றும் முன்பதிவு நிலை வெளியிடப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரையில் பங்கேற்க பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக ஐந்தே நாட்களில் ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் சுமார் இரண்டு லட்சம் பேர் புனித யாத்திரைக்கு முன்பதிவு செய்துள்ளனர். ஜூலை 3-ம் தேதி தொடங்கும் யாத்திரை ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெறும். இந்த யாத்திரை மொத்தம் 47 நாட்கள் நடைபெறும். நாடு முழுவதும் உள்ள 533 வங்கிக் கிளைகளில் யாத்ரீகர்களுக்கான முன்பதிவு செயல்முறை நடந்து வருகிறது.

அமர்நாத்ஜி ஆலய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான JKSASB.nic.in-ல் ஆன்லைன் முன்பதிவு செய்யப்படுகிறது. 2024-ல், யாத்திரையின் முதல் நாளில் 14,000 பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்தனர்; மொத்தம் 3.5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை மலை மீட்புக் குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு அவசரநிலைக்கு தயார் நிலையில் உள்ளனர். பக்தர்களுக்கு மருத்துவ வசதிகள், தங்குமிடங்கள், போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.