புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவசேனா (உத்தவ்) மற்றும் எம்என்எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிராவில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆதரவுடன் பாஜக ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மூன்றாம் மொழியாக ஹிந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான சிவசேனாவின் (உத்தவ்) செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், “அரசாங்கத்தின் அலுவல் மொழியாக மராத்தி இருக்கும் போது இந்தி கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, முதலில் மராத்தியை முழுமையாகக் கட்டாயமாக்குங்கள். வேலை, தொழில் மற்றும் வியாபாரத்தில் மராத்திக்கு முதலில் மரியாதை கிடைப்பது அவசியம். இந்தி பாலிவுட் படங்களின் உலகம் இங்குதான் இருக்கிறது. நாங்கள் ஏற்கனவே ஹிந்திப் பாடல்களைப் பாடுகிறோம்.

இதற்குப் பிறகு எங்களுக்கு ஹிந்தி கற்பிக்கிறீர்களா? தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு போன்ற மாநிலங்களில் இந்தி மொழியைக் கற்றுக் கொடுங்கள். மகாராஷ்டிராவில் முதல் தேவை மராத்தி. நாடு முழுவதும் இந்தி மோகம் இருக்கும்போது, பள்ளி பாடங்களில் அதை திணிக்க வேண்டிய அவசியமில்லை,” என்றார். மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, “என்டிஏ அரசின் இந்தி கட்டாயத்தை எங்கள் கட்சி ஏற்காது. நாடு முழுவதும் இந்திமயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
நாங்கள் இந்துக்கள், இந்தி மக்கள் அல்ல” என்றார். இந்த போராட்டங்கள் குறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், “நமது தாய்மொழியான மராத்திக்கு எப்போதுமே முதலிடம் கொடுக்கப்படுகிறது. சிலர் இந்தி மொழியை வேறு எதுவும் செய்ய முடியாது என்பதால், இந்தி மொழியை பிரச்னையாக்குகின்றனர். ஆங்கிலம் போன்று இந்தி நாட்டில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
இதனிடையே மத்திய அரசின் என்சிஇஆர்டி புத்தகங்களின் பெயர்களும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன. ஆங்கில வழி புத்தகங்களுக்கு சந்தூர், மிருதங் மற்றும் பூர்வி போன்ற ஹிந்தி பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கும் பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.