புதுக்கோட்டை: கடமை உணர்வு எதுவுமே இல்லாத கொத்தடிமை. எடப்பாடிக்கு என்றைக்குமே தார்மீக உணர்வே கிடையாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எதிரிகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு நாங்கள் இல்லை. அதேநேரத்தில் எதிரிகளை சமாளிக்கக்கூடிய சக்தியும் ஆற்றலும் எங்களுடைய தலைவருக்கு உண்டு என்பதை எடுத்துச்சொல்வதில் நாங்கள் முன்னணியில் நிற்கின்றோம்.
இன்று நாங்கள் செய்து இருக்கும் சாதனைகள் இந்தியாவிலேயே தமிழ்நாடு அடைந்து இருக்கும் நன்மைகள், தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்திருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் இவை எங்கள் கூட்டணியை முன்னேற்றி சென்று வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும். எடப்பாடிக்கு என்றைக்குமே தார்மீக உணர்வே கிடையாது.
தூத்துக்குடி சம்பவத்தில் காக்கை, குருவிகள் போல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதைக் கேட்டபோது நான் டி.வி.யில்தான் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு முதலமைச்சராக இருந்தவர். அவரிடத்தில் நாம் நாகரித்தை எதிர்பார்க்க முடியாது.
அதேநேரம் தலைவர் தளபதி அவர்கள் நாகரிகம் உள்ளவர். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தரக்கூடியவர். இறந்துபோன அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் ஆறுதல் சொல்ல வேண்டியது அவரது பணி, கடமை. அதை உணர்ந்து செயலாற்றக்கூடியவர் எங்களுடைய முதலமைச்சர். கடமை உணர்வு எதுவுமே இல்லாத ஒரு கொத்தடிமை எடப்பாடி பழனிசாமி. நாங்கள் மக்களின் மனதில் இருக்கிறோம்.
ஏட்டிக்கு போட்டி அதுக்கு பெயர் பழனிசாமி. நாங்கள் செய்வதை பின்பற்றி செய்து அதில் தோல்வியை தழுவக்கூடிய ஒரு வெற்றிகரமான நபர்தான் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு அவர் கூறினார்.