தஞ்சாவூர்: தஞ்சை சட்டமன்ற தொகுதி முழுவதும் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டு அறிந்து நிறைவேற்ற பாடுபடுவேன். மக்கள் சொல்வது செயலில் மலரும் என்று தஞ்சாவூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். டீக்கடை, ஹோட்டல் ஆகியவற்றில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் மாநகராட்சி 38,39,40 ,41 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அண்ணா நகர், பர்மா காலனி, விளார் ரோடு பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். வேட்பாளருடன் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மாவட்டத் துணைச் செயலாளர் கனகவல்லி பாலாஜி, டாக்டர் ஸ்ரீராம் சுப்பையா, மண்டல குழு தலைவர் ரம்யா சரவணன், மாமன்ற உறுப்பினர் உஷா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் உதயசூரியனுக்கு வாக்களிக்கும்படி கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். சென்ற இடங்களில் வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பல தெருக்களில் மாடியில் இருந்து பூக்கள் தூவி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது வேட்பாளர் சண் ராமநாதன் பேசும்போது, தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கு எப்போதும் ஒரு தனி சிறப்பு உண்டு. தலைவர் கலைஞர் 1962ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற தொகுதி தஞ்சாவூர். அது முதல் திமுக வின் கோட்டையாக தஞ்சாவூர் திகழ்கிறது. இந்தியாவிலேயே நம்பர் 1 வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றி காட்டி உள்ளார். தமிழ்நாட்டைப் பார்த்து மற்ற மாநிலங்கள் திட்டங்களை கொண்டு வந்து அமல்படுத்தி வருகிறார்கள். ஏன் ஒன்றிய அரசே தமிழக அரசு திட்டங்களை காப்பியடித்து வருகிறது.
மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் திமுக அரசு மீண்டும் அமைய வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். எனவே வரும் தேர்தலிலும் தி.மு.க தான் வெற்றி பெறும். மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் வருவார். என்னை வெற்றி பெறச் செய்தால் தஞ்சை சட்டமன்ற தொகுதியின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றவுடன் வார்டு வார்டாக நேரில் சென்று மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டு அறிந்து அவற்றை நிறைவேற்றி தந்துள்ளேன். மேலும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.
தற்போது தஞ்சை சட்டமன்றத் தொகுதி முழுவதும் மக்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றி தர முழுமையாக பாடுபடுவேன். நான் வெற்றி பெற்றால் தொகுதி மக்கள் அனைவரும் என்னை எளிதில் சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்கலாம். சட்டமன்றத் தொகுதி முழுவதும் பகுதி வாரியாக நானே நேரில் வருகை தந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறேன் என்றார். எனவே தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
பின்னர் மாலை தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை டேனியல் தாமஸ் நகரிலிருந்து பிரச்சாரத்தை வேட்பாளர் சண்.ராமநாதன் தொடங்கினார். அப்பகுதியில் 45,50,51 வார்டுகளில் வேட்பாளர் சண்.ராமநாதன் திறந்த ஜீப்பில் ஒவ்வொரு தெருவாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருடன் எம்.பி.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
சென்ற பகுதிகளில் வேட்பாளர் சண். ராமநாதனுக்கு மலர்களை தூவி பெண்கள் உற்சாக வரவேற்பளித்தனர். சிறுவர்கள் குழந்தைகள் வேட்பாளருடன் கை குலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். செல்லும் இடமெல்லாம் திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு மலர் மழையை மக்கள் பொழிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.