சென்னை: த.வெ.க. தலைவர் விஜய் நாளை 7ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தப்போதிலும் அக்கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்று 6ல் ஆளுநர் ஆர்லேகர் சென்னைக்கு வருகைத் தருவார் எனக்கூறப்படும் நிலையில், அவரை சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விஜய் தரப்பில் இருந்து ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தனிப்பெரும் கட்சி என்பதால் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 118 தொகுதிகள் எனும் அறுதிப்பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைத்த பிறகு கால அவகாசம் வழங்கி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார்.
இதனிடையே, மே 7ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. அந்த விழாவிலேயே அமைச்சர்களும் பதவியேற்க வாய்ப்புள்ள நிலையில், அமைச்சரவையில் இடம்பெறுவோர் குறித்து விஜய் தனது பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். என்.ஆனந்த், செங்கோட்டையன், சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோரும், சத்யபாமா, விஜயலட்சுமி உள்ளிட்ட பெண் எம்.எல்.ஏக்களும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் முடிவடையும் வரை அவர்கள் விடுதியிலேயே தங்கி இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.