சென்னை: மூன்று எம்எல்ஏக்கள் மட்டுமில்லை. இன்னும் சில அதிமுக எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது..
சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. இதன் மூலம் தவெக அரசின் ஆதரவு எண்ணிக்கை 144ஆக உயர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு தப்பியது.
இந்த சூழலில் எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து இன்று இபிஎஸ்-ஐ சந்தித்து பேசினர்.. இதனால் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மீண்டும் இபிஎஸ் உடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில். எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய 3 எம்.எல்.ஏக்களும் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் சபநாயகர் ஜே.சி.டி பிரபாகரனிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.. இதனால் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 44ஆக குறைந்துள்ளது.
பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து 3 பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்தனர்.. இவர்கள் 3 பேரையும் பொன்னாடை போர்த்தி அமைச்சர் ஆதவ் வரவேற்றார்.. இதையடுத்து அடுத்தக் கட்டமாக 3 பேரும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.. விரைவில் திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் போது 3 பேரும் தவெக சார்பில் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது..
எனினும் 3 பேர் ராஜினாமா என்பது வெறும் தொடக்கம் தான் என்றும், மேலும் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.. தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இயங்கி வருகிறது.. எனவே தவெக அரசு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்ய நினைக்கிறதாம்.
எனவே அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களை தவெகவில் இணைக்க திட்டமிட்டுள்ளதாம்.. அப்படி அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யும் போது அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்ய தவெக நினைப்பதாகவும் கூறப்படுகிறது..