சென்னை: கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டதாகவும், அனுமதி கிடைத்த பின்னர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட 13 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவிபேட், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கண்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதாகவும், பெல் நிறுவன பொறியாளர் உடனிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 6 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களையும் சரிபார்க்க வேண்டும் என்றும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
