புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் விமானப் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 397 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன், 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
டெல்லியின் தென்கிழக்கு, மத்திய டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி, பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குருகிராமில் சோஹ்னா சாலையில் இஸ்லாம்பூர் கிராமம் அருகே சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
397 விமானங்கள் தாமதம்
கனமழையால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 397 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், டெல்லிக்கு வரவிருந்த 3 சர்வதேச விமானங்கள் உட்பட 15 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இதில் 12 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், 2 விமானங்கள் சண்டிகருக்கும், ஒரு விமானம் லக்னோவுக்கும் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சாலை சீரமைப்பு பணிகளை கருத்தில் கொண்டும், குருகிராமில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றவும், மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களை கற்கவும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியின் பெரும்பாலான பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. நொய்டா, குருகிராம், பரிதாபாத் பகுதிகளுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
