சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், செம்பியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், மனுதாரர் குறிப்பிட்ட கடைகளில் 5 கடைகள் மூடப்பட்டுவிட்டதாகவும், எஞ்சிய கடைகளின் இருப்பு மற்றும் விற்பனை பதிவேடு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், வாடிக்கையாளர்களுக்கு ரசீதுகள் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
எனவே, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என்றும், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார். உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக ஆகஸ்ட் 7-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
